Tuesday, February 28, 2012

திண்ணைகள் காணமல் போனது ஏன்?

வீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை..).

நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில்  முக்கியமானது வீட்டின்  முன் புறத்தில் இருக்கும்  திண்ணைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களில் கட்டும் வீடுகளில் கூட திண்ணை வைத்து வீடு கட்டுவதே  இல்லை....


வீட்டில் சின்னதும் பெரிதுமாக இரண்டு திண்ணைகள் இருக்கும்.. விருந்தினர்கள் யார் வந்தாலும முதலில்  அவர்கள் வீட்டின் திண்ணையில் உட்கார்நது தண்ணீர் கொடுத்து இளைப்பாறி  பிறகு வீட்டின் உள்ளே வர அனுமதிப்பார்கள். அதுவே வேண்டாதவர்கள் என்றால் வீட்டின் வாசலில் இருக்கும் திண்ணை உட்காரவைத்து பேசி அனுப்பி விடுவார்கள்.....

வீட்டில் இடம் இருக்காத போது வெளியூரில் இருந்து நிறைய பேர் வந்தால், பாய் தலையனை கொடுத்து திண்ணையில் படுத்துக்கொள்ள சொல்வார்கள்.. அந்த திண்ணைகளில் இருக்கும் தூண்களை சுற்றித்தான்  பிடிக்கின்ற ஆட்டம் சிறு வயதில் குழந்தைகள் விளையாடுவர்கள்.

தாயகட்டை  விளையாடவும், ஏழுகாய் விளையாடவும் சரியான இடம் திண்ணைகள்தான்...  சின்ன திண்ணையாக இருந்தால் ஒரு பக்கம் கால் பூமியில் தொங்க விட்டுக்கொண்டு விளையாடுவது ஒரு பெரிய சுகம்...

சில குடும்ப பிரச்சனைகளின் திடிர் பஞ்சாயத்துக்கள் திடும் என்று அந்த திண்ணைகளில் நிகழும்...நாட்டமைகளாக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெருசுகள் செயல்படும்...


அந்த திண்ணைகளில் உட்கார்நது தான், எம்ஜிஆர், அம்மா,கலைஞர் என்று பலரும் இந்த தேர்தலில் எவ்வளவு சீட்டு வாங்குவார்? என்பதில் இருந்து, பக்கிரி வீட்டுக்கு இவ்வளவு பணம் எப்படி திடுதிப்புன்னு வந்தது என பல ஊர் கதைகள் பேசபட்ட திண்ணைகள் அவை... ஊரில் நடக்கும் அனைத்து விஷயமும் தேமே என்று இருக்கும் அந்த திண்ணைக்கு தெரியும்.

சில நேரங்களில் சொந்தக்கார இளைஞர்கள் சிலர் குடித்து விட்டு நேராக   அந்த பெரிய திண்ணைகளில் தஞ்சம் அடைவதும் உண்டு.. சில நேரங்களில் உடைகள் நெகிழ்ந்து முக்கால் வாசி கவர்ச்சியில் தூங்குவார்கள்..

இரவு நேரங்களில் திண்ணையில் படுத்துக்கொண்டே கதை அடித்துக்கொண்டு தூக்கம் வராத இரவுகளில் நிறைய  பேசி இருக்கின்றோம்.. அந்த காலங்கள் ரொம்பவும் ரம்யமானவை....

தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களில் சாப்பிட்டு விட்டு  திண்ணையில் உட்கார்ந்து சாலையை (ரோட்டை) வேடிக்கை பார்த்தபடி நாம் கதை பேசுவோம் ..

வெயில் படும்படி  இருக்கும் வீட்டு திண்ணைகளில் வற்றல், வடாம், சொத்துவத்தல், மிளகாய்தூள், இட்லிதூள் போன்றவை காய வைத்து அறைக்க இது போன்ற திண்ணைகள் பேருதவி புரிந்து இருக்கின்றன...


வெளியூரில் இருந்து  நடுராத்திரியில் சூழ்நிலைகாரணமாக சொந்தக்கார வீட்டுக்கு வருபவர்கள் புகலிடம் அந்த ரோட்டோர வீட்டு திண்ணைகள்தான்..  ஊருல அப்போ லாட்ஜ், ரூம் எல்லாம் எங்கே  இருந்தது.....???


எங்க இந்த நேரத்துக்கு போனா...
நடுராத்திரியில் அவுங்க வீட்டுக்கு போய் சேரனும்...
அர்த்த ராத்திரியில போய் அவுங்கள எழுப்பனுமா? என்று மனைவி லாஜிக்கா கேள்வி எழுப்பினால்....??? புகலிடம் திண்ணைகள் தானே...???

தானே வீட்டு திண்ணை இருக்கு.. கருக்கல்ல (விடியல் காலை) எழுந்து அவுங்களை பார்த்துட்டு சேதி சொல்லிட்டு சுருக்கா  வந்துடறேன் என்பதாய் மனைவிக்கு பதில்  சொல்லிவிட்டு போவார்கள்.....

தாய்மார்கள் வாசல் தெளிக்க கதவை திறந்தால், யாராவது  ஒரு வழி போக்கனோ அல்லது  ஊரில் இருக்கும் யாராவது ஒருவரின்   சொந்தக்காரரோ  அவர் வீட்டு திண்ணையில் படுத்து இருப்பார்.....

சிலர் அடுத்தவன் வீட்டு திண்ணையில் படுத்து இருப்பதால் கருக்கலில் எழுந்து சென்று விடுவார்கள்.. ஆனால் சிலர் அசதியில் படுத்து விடுவார்கள்..

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் திண்ணைகளில்  உட்கார்ந்து சுபநிகழ்ச்சி பத்திரிக்கைகளை தாம்பால தட்டில் வைத்து பெயர் எழுதி வெற்றிலை பாக்கு வைத்து  அவசியம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று சொல்லும் வார்த்தைகளையும், நம்ம பொண்ணு கல்யாணம் இது, ஜமாய்ச்சிடலாம் என்ற வாக்கியங்களையும் சலிக்க சலிக்க கேட்ட திண்ணைகள் இன்று தேட வேண்டியதாகிவிட்டது...

எழுபதுக்கு மேல்  வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு சுயநினைவு தப்பி விட்டால் வீட்டின் உள்ளே இருந்து திண்ணைக்கு டிராண்ஸ்பர் செய்வார்கள்... பொதுவாக ஓட்டு வீடுகளில் திண்ணை அவசியம் இருக்கும்......


இப்படி பல சிறப்புகளை உள்ளடக்கிய திண்ணை வளரும் தலைமுறைக்கு  தெரியாமலேயே போய் விட்டது.... 

இது யார் பிழை..? இனியாவது திண்ணைகள் வைப்போமா நம் வீட்டில்...?

No comments:

Post a Comment